செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

கொரோனாவின் 2-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2020-10-01 20:30 GMT   |   Update On 2020-10-01 20:30 GMT
கொரோனாவின் 2-ம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் 16 கூறுகள் சி.டி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கான பிந்தைய நல்வாழ்வு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் உமாநாத், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கான பிந்தைய நல்வாழ்வு மையத்துக்கு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் சிகிச்சைக்காக வர வேண்டும்.தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவின் 2-வது கட்ட அலை ஏற்படுகிறது என உலக அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் 2-வது கொரோனா அலை வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2-ம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

பொதுமக்கள் முககவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News