செய்திகள்
அவிநாசி சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி - திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடக்கம்
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பின்றி, சிதிலமடைந்துள்ள கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அவிநாசி:
அவிநாசி சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி தொடங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவார பாடல் பெற்ற பெருமையும் கொண்ட அவிநாசியில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
அதன் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் தேவார பதிகம் பாடி உயிர்ப்பிக்க செய்த வரலாறு நடந்ததாக கோவில் வரலாற்றில் குறிப்பு உள்ளது. பிரசித்தி பெற்ற குளக்கரையில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தனி கோவில் உள்ளது.
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பின்றி, சிதிலமடைந்துள்ள கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து அவிநாசிக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பக்தர்கள் மனு அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணி துவங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக உபயதாரர்களின் உதவி கேட்டு ‘பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் கோவில் விமானம் மராமத்து செய்து வர்ணம் பூசுவது, சேதமடைந்துள்ள முன்புற கான்கிரீட் கட்டடத்திற்கு பதிலாக கல் மண்டபம் கட்டுவது , கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்தமண்டபம் மராமத்து செய்வது, வடக்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயிலில் கல் மண்டபம் கட்டுவது உட்பட பல திருப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் கூறுகையில்:
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. உபயதாரர்களின் நன்கொடை கேட்கப்பட்டுள்ளது என்றார்.