ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவில்

அமாவாசையையொட்டி, இன்று மருதமலை, பேரூர் உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

Published On 2021-09-06 05:51 GMT   |   Update On 2021-09-06 05:51 GMT
கோவில்களில் வழக்கம்போல பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். அத்துடன் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றப்பட வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும்.
அமாவாசையையொட்டி கோவையில் உள்ள மருதமலை, பேரூர் உள்பட 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் சமீரன் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடுதல் கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் நடை சாத்தப்படும் என்ற கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அமாவாசை நாள் என்பதால் கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், மேட்டுப்பாளையம் வனப்பத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மேற்கண்ட கோவில்களில் வழக்கம்போல பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். அத்துடன் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றப்பட வேண்டியது பொதுமக்களின் கடமை ஆகும்.

எனவே கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News