செய்திகள்
பிஎஸ்எப் அதிகார வரம்பு விவகாரம்- அமித் ஷாவை சந்திக்கிறார் சரத் பவார்
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு போன்ற விசாரணை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சரத் பவார் குற்றம்சாட்டினார்.
புனே:
பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை சோதனை நடத்தவும், சந்தேகத்திற்கு உள்ளானவர்களை கைது செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லை பாதுகாப்ப படையின் அதிகார வரம்பு நீட்டிப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறுகையில், உள்துறை மந்திரி அமித் ஷாவைச் சந்தித்து அவரது எண்ணங்களை அறிய உள்ளதாக தெரிவித்தார்.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு போன்ற விசாரணை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் சரத்பவார் குற்றம்சாட்டினார்.