மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாகி விட கூடாது - பிரேமலதா
திருப்பூர்:
திருப்பூரில் வருகிற 15-ந் தேதி தே.மு.தி.க. முப்பெரும் விழா காங்கயம் ரோட்டில் நடைபெறவுள்ளது.
இந்த முப்பெரும் விழாவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு பந்த கால் நாட்டு விழா திருப்பூர்- காங்கயம் ரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் அக்பர் முன்னிலை வகித்தார் .
இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோல் நாட்டினர்கள். அதன்பின்னர், பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூரில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை பொதுக்கூட்டமாக அமையும். முதல்வர் வெளிநாடு பயணம் வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்தி வழி அனுப்பியதோடு தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பொருளாதார சரிவு வேதனை அளிக்கிறது. ஜி.எஸ்.டி போன்றுவெறும் திட்டம் அறிவிப்பதன் மூலம் இங்கு எதுவும் நடக்க போவதில்லை. பொதுமக்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.
ஜி.எஸ்.டியால் பல லட்சம் தொழில்கள் அழியும் நிலை உள்ளது. இதுகுறித்து, பிரதமரிடம் முறையிட்டுள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும் அது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடக் கூடாது.
தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். பெண்கள் இதுபோன்ற உயர் பதவியை பெறுவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.