செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தம் கிடைக்கும்: மந்திரி ராஜேஷ் தோபே
சனிக்கிழமை (நாளை) முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு ரத்தம் இலவசமாக கிடைக்கும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை :
அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கு ரத்தம் முக்கிய தேவையாக கருதப்படுகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து ரத்த தானம் பெற்று ரத்த வங்கிகளில் சேமித்து வைத்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை ரத்த வங்கிகள் மூலம் பெற கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் நோயாளிகள் சிகிச்சைக்காக ரத்தம் பெற ரூ.800 வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர். வரும் சனிக்கிழமை(நாளை) முதல் இதுபோன்ற கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அரசு நடத்தும் மருத்துவமனைகளில் கட்டணம் இன்றி இலவசமாக கிசிச்சைக்கு தேவையான ரத்தம் வழங்கப்படும்.
மாநிலத்தில் தற்போது 344 ரத்த வங்கிகள் உள்ளன. தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக ரத்த தானம் குறைந்துள்ளது. இதனால் தற்போது ரத்த இருப்பிலும் பற்றாக்குறை நிலவுகிறது.
12-ந் தேதி(நாளை) சரத்பவாரின் 80-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலத்தில் சிறப்பு ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.