உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவை அருகே பட்டப்பகலில் துணிகரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் கை வரிசை

Published On 2022-01-13 05:32 GMT   |   Update On 2022-01-13 05:32 GMT
பட்டப்பகலில் துணிகரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

புதுவை ஆலங்குப்பம் அன்னை நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 49). 

இவர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இயங்கும் ஆரோவில் கிராம செயல்வழிகுழு நிர்வாகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

மாலை 3 மணி அளவில் பொன்னம்மாள் அலுவலகத்திலிருந்து திண்டிவனம்&புதுவை பைபாஸ் சாலையில் புதுவை நோக்கி வந்து கொண்டிருந்தார். நாவற்குளம்-பட்டானூர் அருகே சென்றபோது பின்னால் ஹெல்மெட் அணிந்து  மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன்   தாலி சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றார். 

அதிர்ச்சி அடைந்த பொன்னம்மாள் கூச்சலிடவே அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் பொன்னம்மாளிடம் நடந்தவற்றை கேட்டறிந்து அந்த மர்ம நபரை பின்தொடர்ந்து விரட்டினர். ஆனால் செயினை பறித்து சென்றவன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டான். 

இது குறித்து பொன்னம்மாள் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற ஹெல்மெட் நபரை தேடி வருகிறார். 

மேலும் அந்த பகுதியில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பலரும் நடமாடும் வேளையில் பெண்ணிடம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News