செய்திகள்
நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன?: மழைநீர் தேக்கம் குறித்து நீதிபதிகள் வேதனை
உயர்நீதிமன்றம் மதுரைகிளை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற இதுவரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதேபோல் தென் தமிழகத்திலும் கனமழை பெய்தது.
இதனால் சாலைகள், தெருக்கள், வீடுகள் என எல்லா இடங்களும் வெள்ளத்தால் சூழ்ந்தன. மாநகராட்சி பகுதிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டன.
இருந்தாலும் ஒன்றிரண்டு தாழ்வான பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. உயர்நீதிமன்றம் மதுரைகிளை வளாகத்தில் இன்னும் மழை வெள்ளம் தேங்கிய நிலையில் உள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தவறும் பட்சத்தில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.