ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-09-21 08:41 GMT   |   Update On 2020-09-21 08:41 GMT
புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கோவில்களில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடை மாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஆஞ்சநேயர் துளசி மற்றும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News