செய்திகள்
கருப்பு பூஞ்சை பாதிப்பு

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு? -ஹர்ஷ வர்தன் தகவல்

Published On 2021-06-28 13:35 GMT   |   Update On 2021-06-28 13:37 GMT
தடுப்பூசி போடுவதில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்றும், செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளில் அமெரிக்காவை முந்தியுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்தறை மந்திரி ஹர்ஷ வர்தன் குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயும் வேகமாக பரவி வருகிறது. இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், கண், மூளை, நுரையீரல் என பரவி உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கே அதிக அளவில் இந்த நோய் பரவி வருகிறது. இதனால் இதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 29வது உயர்நிலை மந்திரிகள் குழு கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 34,940 பேர் கொரோனா நோயாளிகள் என்றும் குறிப்பிட்டார்.



வயது வாரியாக பார்க்கையில், 18 முதல் 45 வயது வரை உள்ள 13,083 பேருக்கும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 17,464 பேருக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. 60 வயதுக்கு மேல் 10,082 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பேசிய ஹர்ஷ வர்தன், தடுப்பூசி போடுவதில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியிருப்பதாகவும், இதுவரை செலுத்தப்பட்ட மொத்த  தடுப்பூசி அளவுகளில் அமெரிக்காவை முந்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்கா கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தடுப்பூசி போடத் தொடங்கியது, ஆனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News