கே.வி. குப்பம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த ரெயில்வே ஊழியர்
வேலூர்:
கே.வி குப்பத்தை அடுத்த பில்லாந்திபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 65).இவர் ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவருடைய மனைவி செந்தாமரைச் செல்வி மற்றும் மகன்கள் டாக்டர் காந்தி, என்ஜினியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
கண்ணாயிரம் பில்லாந்தி பட்டு கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வந்தது.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது கண்ணாயிரம் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெங்களூரில் வசித்து வரும் அவருடைய மனைவி மற்றும் மகள்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கே.வி குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கண்ணாயிரம் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.