செய்திகள்
ஜேக்கப் ஜூமா

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை

Published On 2021-06-30 02:55 GMT   |   Update On 2021-06-30 02:55 GMT
ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா.

இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
Tags:    

Similar News