ரெட்டியார்பாளையத்தில் மளிகைக்கடைக்காரர் மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி:
ரெட்டியாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது55). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக கணேசன் நீரழிவு நோயால் அவதியடைந்து வந்தார். இதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசன் சுயநினைவு இழந்து போனதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் சிவா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.