ஆன்மிகம்
நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளிய போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)

பங்குனி தேர்த்திருவிழா நிறைவு: நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதி உலா

Published On 2021-03-31 03:15 GMT   |   Update On 2021-03-31 03:15 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து பங்குனி தேர்த்திருவிழா நிறைவுபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 28-ந் தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 29-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் கோவில் வளாகத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 3 மணிக்கு புறப்பட்டு கருட மண்டபத்திற்கு மாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார்.

வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News