செய்திகள்
கரடி

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் கரடி- கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

Published On 2021-10-18 07:39 GMT   |   Update On 2021-10-18 07:39 GMT
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரவேணு, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

கோத்தகிரி கன்னிகா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு இந்த பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது. வெகுநேரமாக அங்கு சுற்றி திரிந்த கரடி திடீரென அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டது.

கரடி வீட்டிற்குள் வந்ததை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட்டம் ஓட்ட ம் பிடித்தனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கரடி வீட்டிற்குள்ளேயே சுற்றி திரிந்தது. அங்குள்ள பொருட்களை எடுத்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மக்கள் உதவியுடன் தீப்பந்தத்தை எடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்று கரடியை வெளியே விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த கரடி வீட்டை விட்டு வெளியில் வந்து வனத்திற்குள் சென்றது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே கரடி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் சுற்றி திரிந்தது. அப்போது அங்கு பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். கரடி வந்ததால் பீதியடைந்த அவர்கள் பூங்காவில் இருந்த கட்டிடத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் சுற்றி வந்த கரடி பின்னர் சென்று விட்டது.

தொடர்ந்து இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சம் அடைந்துள்ளனர். தோட்ட தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்துடனேயே வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News