செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியை தாண்டியது

Published On 2019-10-19 04:12 GMT   |   Update On 2019-10-19 04:12 GMT
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 114.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 116.22 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 347 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 34 ஆயிரத்து 722 கன அடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 27 ஆயிரத்து 987 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று முன்தினம் 113.03 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 114.83 அடியாக உயர்ந்தது.

இன்று காலை இது 116.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து இதேபோல் இருந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை மேட்டூர் அணை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News