செய்திகள்
திருப்பூரில் தக்காளி விலை குறைவு - இல்லத்தரசிகள் நிம்மதி
வெளிமாநில வரத்து அதிகரித்து விலை குறைந்ததால், உழவர் சந்தையிலும் தக்காளி விலை சரிவை சந்தித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் உழவர் சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஆக உயர்ந்திருந்தது. சில்லறை விற்பனை மற்றும் மளிகை கடைகளில் தக்காளி கிலோ ரூ.150 வரை விற்றதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்த்து மகாராஷ்டிரா, சட்டீஸ்கரில் இருந்து மொத்த வியாபாரிகள், 8 டன் தக்காளி கொள்முதல் செய்தனர். தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிகளவில் தக்காளி வந்ததால் ஒரு நாளில் விலை தலைகீழாக மாறி கிலோ ரூ.60க்கு வந்தது.
2 நாட்களாக வெளிமார்க்கெட்டில் தக்காளி குவிந்தது. இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், உழவர் சந்தையில் விற்பனை சரிந்துள்ளது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு 8 டன் தக்காளி வந்தது. கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கு விற்றது.
கிலோ ரூ. 100க்கு விற்ற தக்காளி ஒரே வாரத்தில் ரூ.50 குறைந்து கிலோ 50 ரூபாயாகியுள்ளது. உச்சத்தில் இருந்த தக்காளி விலை இறங்கி வந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.