செய்திகள்
குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு
வேம்பு,நாவல்,புங்கன் உள்ளிட்ட நாற்றுகள், பசுமை குடில் அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
உடுமலை:
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் சுழற்சி முறையில் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் வாயிலாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.
அவ்வகையில் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையில் நாற்றுகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. வேம்பு, நாவல், புங்கன் உள்ளிட்ட நாற்றுகள், பசுமை குடில் அமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஊராட்சிகளில் நடப்பு சீசனில் 9 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவமழை பெய்து வருவதால் ஊராட்சி வாரியாக மரக்கன்றுகள் அனுப்பப்படுகிறது. மரக்கன்றுகள் நடவு செய்தவுடன் அவற்றுக்கு பாதுகாப்பு வேலி அமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் திட்ட விதிகளின்படி குறிப்பிட்ட நாட்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றனர்.