செய்திகள்
பரமக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
பரமக்குடி அருகே ரேஷன் அரிசி மூடைகள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:
பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன் குறிச்சி விளக்கு ரோடு குமரக்குடி காலனி அருகில் பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜா தலைமையில் வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 33 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் வேந்தோணி அண்ணா நகரை சேர்ந்த சோலைமகன் ராஜா (வயது 29) என்பவரை தாசில்தார் தமிம் ராஜா விசாரித்தார். அப்போது அவர் போகலூர் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி மூடையை குமரக்குடிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். உடனே அந்த வண்டியை பறிமுதல் செய்து பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அதில் இருந்த 33 மூடை ரேஷன் அரிசி கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் டிரைவர் ராஜாவை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி, நயினார் கோவில், போகலூர் பகுதிகளில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே இது குறித்துஉணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.