செய்திகள்
தற்கொலை

வில்லியனூரில் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-06 11:55 GMT   |   Update On 2021-04-06 11:55 GMT
வில்லியனூரில் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் பாரதிநகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு அனிலன் என்ற மகன் உள்ளார். இவர் நெல்லித்தோப்பில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது தங்கை ஆனந்தி (வயது17). இவர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சேகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் ஜோதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் கண்டமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் அனிலனுடன் இருந்து ஆனந்தி படித்து வந்தார்.

இதற்கிடையே ஆனந்தி வில்லியனூர் பட்டாணிக்கடை அருகில் உள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஆனந்தி திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆனந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அனிலன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஆனந்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News