முதல்-மந்திரி பதவியில் இருந்து பட்னாவிஸ் விலக வேண்டும்- சிவசேனா வலியுறுத்தல்
மும்பை:
ராட்டிய மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந்தேதி தேர்தல் நடந்தது. ஆனால் அங்கு இன்னும் புதிய அரசு அமைய வில்லை. முதல் மந்திரி பதவி விவகாரத்தில் சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.
மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு புதிய அரசு அமையுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் தருவதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே பா.ஜனதா எங்களை அணுக வேண்டும். காபந்து அரசாக இருக்கும் பா.ஜனதா தனது பதவியை தவறாக பயன்படுத்தி புதிய அரசு அமைக்க முயற்சிக்க கூடாது.
சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயை சந்திக்க வரபோவதாக எந்த தகவலும் வரவில்லை. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த நினைப்பது ஓட்டு போட்ட மக்களை அவமரியாதை செய்வதாகும்.
இவ்வாறு சஞ்சய்ராவத் கூறியுள்ளார்.