ஆன்மிகம்
கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட கிழக்குவாசல் மற்றும் ரதவீதி சாலை.

அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

Published On 2021-09-04 04:08 GMT   |   Update On 2021-09-04 08:39 GMT
கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ராமேசுவரம் :

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிசாலைகள் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் நடமாட்டம் குறைவாக இருந்து. வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி சர்வ அமாவாசையாக இருப்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த
கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 6-ந் தேதி அமாவாசை அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்யவும், கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்தும், மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News