உள்ளூர் செய்திகள்
கொள்ளை

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை

Published On 2021-12-21 11:11 GMT   |   Update On 2021-12-21 11:11 GMT
கோவை வடவள்ளி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வடவள்ளி:

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 18-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சங்கனூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல் தங்க நாணயம் உள்பட 4½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைர மோதிரம், வெள்ளி கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு உள்பட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பிய தினேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News