செய்திகள்
கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை

திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை

Published On 2021-09-26 05:03 GMT   |   Update On 2021-09-26 05:03 GMT
திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் கத்திமுனையில் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி செல்லும் வழியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.

இங்கு விற்பனையாளராக திருமங்கலத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது47), செக்கானூரணியை சேர்ந்த ஞானசேகரன் (42) இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை என்பதால் மது விற்பனை ஜோராக இருந்தது. இதனை அறிந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடை மூடும் நேரத்தில் கொள்ளையடிக்க காத்திருந்தனர்.

இந்த நிலையில் அட்டை பெட்டிகளை அடுக்கி வைப்பதற்காக விற்பனையாளர் பரமேஸ்வரன் வெளியே வந்தபோது முக கவசம் அணிந்த 2 மர்மநபர்கள் பட்டாக்கத்தியுடன் உள்ளே புகுந்தனர்.

மர்ம நபர்கள் இருவரும் விற்பனையாளர்களை மிரட்டி உள்ளே சென்று விடுங்கள், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என பயமுறுத்தி கடைக்குள் இருந்த அறையில் இருவரையும் தள்ளிவிட்டு கதவை பூட்டினர்.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக டாஸ்மாக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர் கல்லாவில் இருந்த ரூ. 1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அறைக்குள் இருந்த 2 விற்பனையாளர்களையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்தனர்.
Tags:    

Similar News