செய்திகள்
மணி

நாகர்கோவில் அருகே மாயமான வங்கி ஊழியர், உடல் துண்டான நிலையில் பிணமாக மீட்பு

Published On 2021-06-19 15:47 GMT   |   Update On 2021-06-19 15:47 GMT
நாகர்கோவில் அருகே மாயமான வங்கி ஊழியர் உடல் துண்டான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 53). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு மணி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதே சமயத்தில் அவரது செல்போன் வீட்டில் இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னா் இதுகுறித்து ேநசமணிநகா் ேபாலீஸ் நிலையத்தில் புகாா் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் அருகே தோவாளையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. உடல் துண்டாகிய நிலையில் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.

அப்போது இறந்து கிடந்தவரின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து, அவர் வங்கி ஊழியர் மணி என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிபட்டு மணியின் உடல் துண்டாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News