வழிபாடு
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா தொடங்கியது
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வழக்கமாக கோவிலில் நடைபெறும் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ஆபரண பெட்டி கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அதிலுள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை கோவில் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆபரண பெட்டி வரவேற்புக்குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் மற்றும் தமிழக-கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வழக்கமாக கோவிலில் நடைபெறும் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பி.கே.லால் செய்துள்ளார்.