செய்திகள்
சித்தராமையா

காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்: சித்தராமையா

Published On 2020-10-30 01:46 GMT   |   Update On 2020-10-30 01:46 GMT
காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சிரா தொகுதியில் கட்சி வெற்றி பெறுவது உறுதி. ஆர்.ஆர்.நகரில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே போட்டி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. முனிரத்னா காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார். அவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்கிறார். பீகார் தேர்தலுக்கு பிறகு எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்படுவார். டெல்லியில் இருந்து எனக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.

நிர்வாகிகள் சிலர் என் மீது உள்ள அன்பால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று பேசுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இந்த விஷயத்தை பொறுத்தவரையில் யார் எந்த கருத்தை வெளிப்படுத்தினாலும் காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். முதல்-மந்திரியாக வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் ஆசைப்படுவது தவறு இல்லை. காங்கிரசில் முதல்-மந்திரியாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால் நான் சன்னியாசி அல்ல. கட்சி மேலிடம் முடிவு செய்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன். நான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறினேன். ஆனால் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நான் வருகிற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து அதை பார்வையிடவில்லை.

பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் அநாகரிகமாக பேசுகிறார். அதனால் அவருக்கு அரசியல் ஞானம் இல்லை, காட்டுவாசி என்று கூறினேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News