செய்திகள்
மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Published On 2021-05-03 10:44 GMT   |   Update On 2021-05-03 10:44 GMT
தமிழக முதல்- அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சென்னை:

தமிழக முதல்- அமைச்சராக வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

தேர்தல் முடிவுகள் நேற்று தி.மு.க.வுக்கு சாதகமாக வெளிவந்த உடனேயே அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று இவர்கள் இருவரும் மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்து பேசினார்கள். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நேற்று நடைபெற்றது மரியாதை நிமித்தமான சந்திப்பாக கருதப்பட்ட நிலையில் இன்று புதிய அரசு பதவி ஏற்பது தொடர்பான ஆலோசனைக்காக தலைமை செயலாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆலோசிப்பதற்காக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது.


ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அவர் எதிர்கட்சி தலைவராக இருந்து தற்போது முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், ஆழ்வார்பேட்டை வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News