மேலூர் அருகே சுத்தியலால் அடித்து டெய்லர் படுகொலை - மதுபோதையில் வாலிபர் வெறிச்செயல்
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள காரியேந்தல்பட்டியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுமதி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியில் இருந்த ரஜினிகாந்த் அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டி (வயது20) என்பவரை மது குடிக்க வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி நேற்று இரவு ரஜினிகாந்த் வீட்டில் அவருடன் வீரபாண்டி மது குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 2பேருக்கு போதை தலைக்கேறியது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த வீரபாண்டி அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத வீரபாண்டி போதையில் மீண்டும் ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் தலையில் சுத்தியலால் சரமாரியாக அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து வீட்டில் பூஜைக்காக வாங்கி வைத்திருந்த மாலையை எடுத்து ரஜினிகாந்த் கழுத்தில்போட்டு விட்டு வீரபாண்டி தப்பினார்.
ரஜினிகாந்த பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மநாபன், தனிப்பிரிவு ஏட்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.