செய்திகள்
ராதாகிருஷ்ணன்

40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு- ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-09-10 05:52 GMT   |   Update On 2021-09-10 05:52 GMT
கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் ஞாயிற்றுக் கிழமை 40 ஆயிரம் மையங்களில் நடைபெற இருப்பதையொட்டி முன்கூட்டியே தடுப்பூசியை அதிகமாக வரவழைத்துள்ளோம். இன்றைய நிலவரப்படி 32 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

இன்றும், நாளையும் 5 லட்சம் தடுப்பூசி போட்டாலும் 12-ந்தேதிக்கு அதிகமாகவே தடுப்பூசி கைவசம் இருக்கும். ஒவ்வொரு மையத்திலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள் தொலைதூர பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநில எல்லைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம்.

கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சுற்றுயுள்ள பகுதிகள் மட்டுமின்றி 19 மாவட்டங்களில் ஏற்ற இறக்கத்துடன் கொரோனா தொற்று உள்ளதால் இந்த முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 260 பேர் பலி

Tags:    

Similar News