செய்திகள்
கலெக்டர் நாகராஜன்

சாதாரண காய்ச்சல் என கருதிக் கொண்டு டாக்டர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்- கலெக்டர்

Published On 2021-06-09 10:16 GMT   |   Update On 2021-06-09 10:16 GMT
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் சீட்டினை பெற்றுக் கொண்டு மட்டுமே மருந்துக்கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பெரும் தொற்று பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் கோவை மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு புதிய தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் முதலில் சாதாரண வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளான சளி, இருமல் போன்று உள்ளதால் பொதுமக்கள் அதனை சாதாரண வைரஸ் காய்ச்சல் என எண்ணி மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துக்கடைகளில் வாங்கி பயன்படுத்துவதால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு அதன் மூலம் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது.



எனவே பொதுமக்கள் காய்ச்சல் வந்தவுடன் சாதாரண காய்ச்சல் என புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் சீட்டினை பெற்றுக் கொண்டு மட்டுமே மருந்துக்கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட மருந்துகளை நோயாளிகளுக்கு விற்பனை செய்தால் நோயாளியின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் மருத்துவரின் தகவல்களையும் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களை பெற்றுக் கொண்டு மருந்துகளை வழங்கலாம்.

எந்நிலையிலும் மேற்கூறிய மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News