செய்திகள்
கோப்புபடம்

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு - பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Published On 2021-10-12 04:57 GMT   |   Update On 2021-10-12 04:57 GMT
துவக்க, நடுநிலைப்பள்ளிகள், திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் அடுத்த வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
திருப்பூர்:

கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பின் இதுவரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள போவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுக வேண்டும். எழுத்து, கதைகூறுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

கற்றல் மற்றும் கற்பித்தல் பணி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அடுத்த வாரத்துக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடக்க கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளனர். 
Tags:    

Similar News