செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் சுவர் இடிந்து விழுந்து கைதியின் கால் முறிந்தது

Published On 2018-11-08 10:46 GMT   |   Update On 2018-11-08 10:46 GMT
கடலூர் மத்திய சிறையில் சுவர் இடிந்து விழுந்ததில் கைதியின் கால் முறிந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:

கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் விசாரணை கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அதேபோல் சென்னையை சேர்ந்த ரூபன் என்பவர் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரூபனும், சுரேசும் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை சுரேஷ் அங்குள்ள தடுப்புச்சுவரை பிடித்துக் கொண்டு அடுத்த அறையில் உள்ள ரூபனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சுரேசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டார்.

உடனே சிறை காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சுரேசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News