செய்திகள்
கேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்
கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு 3 பேராசிரியர்கள் காரணம் என மாணவி குறிப்பு எழுதி வைத்திருந்தார்.
பேராசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
தனது மகள் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை நடத்தவும், குறை தீர்க்கும் குழு அமைக்கக் கோரியும் ஐஐடி மாணவர்கள் இரண்டு பேர் கல்லூரி அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.