கொளத்தூர் மின்நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கொளத்தூர் தொகுதி நேர்மை நகரில் 33/11 கிலோ வாட் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்தபணி 21.7.19 அன்றே முடிந்திருக்க வேண்டும். நான் 3 முறை நேரில் சென்று ஆய்வு செய்தேன். ஆனால் இதுவரை இந்த மின்நிலைய பணிகள் முடிவடையவில்லை.
இதுபோல் கொளத்தூர் தொகுதி கணேஷ்நகர் துணைமின் நிலைய பணிகளும் தாமதமாகின்றன. இவற்றை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் வருமாறு:-
கொளத்தூர் நேர்மைநகர் துணை மின்நிலைய பணிகள் விரைவாக நடந்து வந்தன. கொரோனா காரணமாக 5 மாதங்கள் பணி நடக்கவில்லை. இனி இந்த மின் நிலைய பணிகள் விரைவாக நடைபெறும். விரைவில் பணி நிறைவு பெறும்.
கணேஷ்நகர் துணை மின் நிலைய பணிகள் விரைவில் தொடங்கும். டெண்டர்விடப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் பணி முடியும். இதுபோல் கொளத்தூர் பகுதியில் 255 கி.மீ. கம்பி வட கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.