செய்திகள்
கொள்ளை

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை

Published On 2021-11-24 05:18 GMT   |   Update On 2021-11-24 05:18 GMT
அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதானந்தன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர்.

அரக்கோணம் அருகே உள்ள கைனூர் கிராமத்தில் இவருக்கு மற்றொரு வீடு உள்ளது.

நேற்று சுதானந்தன் மனைவி மகள்களுடன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் மர்மநபர்கள் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். வீட்டில் உள்ள அறை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சுதானந்தன் கைனூர் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவு 10 மணிக்கு செம்பேடு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன.

சுதானந்தன் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டறிந்தார். இதன் மூலம் பட்டப்பகலில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் கொள்ளையர்கள் பதிவாகி உள்ளார்களா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News