ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2020-12-31 06:34 GMT   |   Update On 2020-12-31 06:34 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது.

தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், குங்குமம், சந்தனம், களபம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், உச்சிகால அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி உற்சவ அம்பாள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க மேல்சாந்திகள் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர். இந்த ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. தாலாட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன்போற்றி, கீழ்சாந்திகள் ராமகிருஷ்ணன் போற்றி, ஸ்ரீதர் போற்றி, ஆகியோர் நடத்தினார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இந்த ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் திரண்டனர்.
Tags:    

Similar News