செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி மக்களை கூடலூர் தீயணைப்பு படையினர் கயிறு மூலம் மீட்ட போது எடுத்த படம்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

Published On 2020-08-04 23:48 GMT   |   Update On 2020-08-04 23:48 GMT
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் இதுவரை சராசரியாக 203 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது தென்மேற்கு பருவமழை கால சராசரி அளவை விட 41 சதவீதம் குறைவாகும்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை சராசரியாக 62.64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேல்பவானி, அவலாஞ்சி, கவுல்பஜார், எமரால்டு, தேவலா, கிளன்மார்கென் மற்றும் நடுவட்டம் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் 609 மில்லி மீட்டரும், பந்தலூர் வட்டத்தில் 177 மில்லி மீட்டரும், குந்தா வட்டத்தில் 741 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த பலத்த மழையின் காரணமாக கூடலூர் வட்டம், கூடலூர் கிராமத்தில் அத்திப்பாளி மற்றும் புத்தூர் வயல் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் அத்திப்பாளியில் 103 பேர் மீட்கப்பட்டு அத்திப்பாளி அரசு ஆரம்ப பள்ளியிலும், புத்தூர் வயலில் 124 பேர் மீட்கப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் இதர அடிப்படை தேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.

கூடலூர் வட்டத்தில் ஒரு வீடும், பந்தலூர் வட்டத்தில் 2 வீடுகளும் மழையால் பகுதி சேதம் அடைந்துள்ளன. கூடலூர் வட்டம், கூடலூர் கிராமம், கே.கே.நகர் என்ற இடத்தில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டது. ஏனைய இடங்களில் பாதிப்புகள் ஏதும் இல்லை. உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மரம் சாய்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டது.

தற்போது மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மீட்பு பணியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளில் இருந்து 112 ஊழியர்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் மற்றும் ‘சத்திய சாய் டிரஸ்ட்’ தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் தற்போது வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பேரிடர் மேலாண்மை கமிஷனர் டி.ஜகந்நாதன், இணை இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News