ஆட்டோமொபைல்
பென்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத விற்பனை இப்படி தான் நடக்கிறது
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வாகனங்கள் விற்பனை குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் பதில் அளித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலம் வாகன விற்பனையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதன் காரணமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் ஆன்லைன் மூலம் தங்களின் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கின.
அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் தனது விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டுவந்தது. இதற்காக பென்ஸ் நிறுவனம் ‘Merc From Home' வலைதளத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.
``மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 20 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று இருக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது இந்தியா ஆன்லைன் விற்பனையில் முன்னணி இடம்பிடிக்கும். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.