செய்திகள்
இலவச வீட்டுமனைப்பட்டா விவரம் ஆதார் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டுகோள்
ஒரு குடும்பத்துக்கு ஒரு பட்டா மட்டுமே என்ற நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் பெயரிலும் பட்டா கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
அவிநாசி:
இலவச வீட்டுமனைப் பட்டா பெறுவோரின் விவரத்தை ஆதார், ரேஷன் ஸ்மார்ட் கார்டு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என திருப்பூர் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது:
வீட்டுமனை பட்டா கேட்டு வழங்கப்படும் மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது விண்ணப்பதாரர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு வழங்குவது மட்டுமின்றி கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கும் மனு வழங்குகின்றனர் என்பது தெரியவந்தது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு பட்டா மட்டுமே என்ற நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் பெயரிலும் பட்டா கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் பட்டா பெற்று வீடு கட்டி வசிப்போர் அந்த இடத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்போர், பட்டா பெற்று10 ஆண்டு ஆன நிலையில் அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தவர்கள் என பலர் மீண்டும் பட்டா கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கில் மனுக்கள் குவிவதால் அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதே பெரிய வேலையாக உள்ளது.
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி சேலை போன்ற சிறப்பு திட்டங்களின் விவரங்களை பயனாளிகளின் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பதிவு செய்வது போன்று, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் அரசின் குடியிருப்பு பெற்றவர்களின் விவரத்தையும் ரேஷன் கார்டு அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.