வழிபாடு
திருப்பரங்குன்றத்தில் பங்குனித் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

Published On 2022-03-22 06:45 GMT   |   Update On 2022-03-22 06:45 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா.

இந்த திருவிழா ஆண்டு தோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினமும் முருகன், தெய்வானையுடன் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சொக்கநாதர்-பிரியா விடை, மீனாட்சி அம்மன் முன்னிலையில் முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கிரிவல பாதை வழியாக பெரிய தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான்-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து முருகப் பெருமான்-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வாசலில் உள்ள பெரிய தேரில் எழுந் தருளினார். காலை 6. 20 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோ‌ஷமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

முன்னதாக சிறிய சட்டத்தேரில் விநாயகப் பெருமான் முன்னே செல்ல, தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பெரிய தேர் ஆடி அசைந்து அழகாக சென்றது கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.

தேரோட்ட திருவிழாவில் மதுரை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags:    

Similar News