லைஃப்ஸ்டைல்
மனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்?

மனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்?

Published On 2019-07-19 06:40 GMT   |   Update On 2019-07-19 06:40 GMT
மனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்? என்பது குறித்து ஆண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.
பெண்கள், தங்கள் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத ஆணைத்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு கணவராக கிடைத்தால் அதை தங்கள் வெற்றியாக கருதுகிறார்கள். தன் கணவர் பெரிய புத்திசாலியாக இருப்பதைவிடவும், தன் பேச்சை மதிப்பவராக இருந்தாலே போதும் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள். இது நாள்வரை யார் என்றே தெரியாத ஒருவரை கணவராக அடைந்தாலும், அவர் தன் சொல்லுக்கு கட்டுப்படுபவராக இருந்தால், அவரைவைத்து வாழ்க்கையை வெற்றிகரமாக ஓட்டிவிடலாம் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணும், தன் கணவரை சரியான பாதையில் வழிநடத்தத் தெரிந்தவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் சில ஆண்களோ மனைவி சொல்வதை கேட்டால் அது தனக்கு மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள். அதனால் தனது சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் கருதுகிறார்கள். ஒருசிலர் மனைவி சொல்லுக்கு கட்டுப்படுவதுபோல பாவனை செய்துகொண்டு, மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி, தான் விரும்பும் காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள்.

‘தனது பேச்சுக்கு கணவர் மறுபேச்சு பேசக்கூடாது’ என்று நினைக்கும் பெண்களின் மனோபாவம் சரிதானா என்று கேட்டால், ‘ஆமாம்.. சரிதான்!’ என்று சொல்கிறார்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள்.

“கணவர் தன் பேச்சை கேட்கவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதை தவறு என்று கூறமுடியாது. சிந்தனை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. நல்ல கருத்துகள் எங்கிருந்தும் வரலாம் என்றிருக்கும்போது அது மனைவியிடம் இருந்து வந்தால் என்ன? நல்ல கருத்து என்றால் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். பெண்கள் கருத்துச்சொல்ல முன்வருவது அவர்களது பொறுப் புணர்ச்சியையும், கடமையையும் வெளிக்காட்டுகிறது.

தனது கணவரை இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்ற அக்கறை எல்லா மனைவிகளிடமும் இருக்கிறது. உறவுகள் பாராட்டவேண்டும் என்ற எண்ணமும் மனைவிகளுக்கு உண்டு. மேலும் கணவன் தன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது, மனைவிக்கு குடும்ப வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. தவறு செய்யும் கணவர் களிடம் பெண்கள் அதிகமாக பேசுவார்கள். அந்த பேச்சுக்கள் ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போலிருக்கும். ஆனாலும் இதை ஆண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏன்என்றால் தவறு செய்யும் கணவரை ஒதுக்கிவிடாமல், அவரை திருத்தி நல்லவர்களாக வாழவைக்கும் பொறுப்பும் மனைவிக்கு இருக்கிறது.

ஆனால் மனைவி, கணவரின் விஷயங்களில் அதிகமாக தலையீடு செய்யும்போது அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சற்று வித்தியாசமாகத் தோன்றும். அது மற்றவர்களுக்கு தெரியவரும்போது, மனைவிகளில் சிலர் அடக்கிவாசிப்பார்கள். சிலர் ‘தனது கட்டுப்பாட்டிற்குள்தான் கணவர் இருக்கிறார்’ என்பதை நாலுபேர் மத்தியில் வெளிப்படுத்த விரும்புவார்கள். அடக்கி வாசிக்கும்போது அங்கே பிரச்சினை உருவாகாது. வெளியே தெரியட்டும் என்று பெண்கள் நினைக்கும்போது நிலைமை தலைகீழாக மாறலாம். விமர்சனத்திற்கும் உள்ளாகலாம்.

கணவர் தன் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று பல பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் கருதுகிறார்கள். பழைய சினிமாவில், அலாவுதீன் மோதிரத்தை தேய்த்தால் வந்து நிற்கும் பூதம் போன்று தன் கணவரும் தன் முன்னே ஓடிவந்து நின்று சேவகம் புரியவேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட கணவன் தனக்கு கிடைத்துவிட்டால் தங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறார்கள்.

அடுத்தகட்டமாக கணவன் தன்னை பற்றி எப்போதும் புகழ்ந்துபேச வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும் அடுத்தவர்கள் முன்புவைத்து புகழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி புகழும்போது பெண்கள் அதிக மகிழ்ச்சிகொள்கிறார்கள்.



இத்தனைக்கும் மேலாக கணவன் தங்களை முழுமையாக நம்பவேண்டும் என்பது அனைத்து மனைவிமார்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் கணவனை பெண்களுக்கு பிடிக்காது. ஆண்களிடம் இருக்கும் அதிக கோபமும், டென்ஷனும்கூட பெண்களுக்கு பிடிக்காததாகவே இருக்கிறது.

‘கணவரின் கோபம் ஏன் உங்களுக்கு பிடிக்காததாக இருக்கிறது?’ என்ற கேள்வியை கவுன்சலிங்குக்கு வந்த பெண்கள் பலரிடம் கேட்டபோது, ‘கோபம், இயலாமையின் வெளிப்பாடு. எதிர்பார்க்கும் விஷயத்தை சரிவர செய்து முடிக்க முடியாதபோதுதான் கோபம் வரும். அதனால் அடிக்கடி கோபம் கொள்கிறவரை நாங்கள் (பெண்கள்) செயலாற்றல் குறைந்தவர்களாகவே கருதுவோம்’ என்று பதில்சொல்கிறார்கள். அதுவும் பலர் முன்பு வைத்து கோபத்தைக்காட்டினால், அதிக அளவில் அவரது தரம் குறைந்துவிடுகிறது என்றும் சொல் கிறார்கள்.

எல்லா பெண்களுமே தங்களுக்கென்று ஒரு ‘இமேஜை’ உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த இமேஜை எல்லா நேரங்களிலும் காப்பாற்றிக்கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்து கிறார்கள். அந்த இமேஜை கணவர் உடைத்தால் எந்த பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் மூன்றாம் மனிதர் களிடம் தன்னைப் பற்றி தவறான கருத்து வரும்படி பேசுவதை பெண்கள் விரும்புவதில்லை. அதனால் ஆண்கள் தங்கள் நெருக்கமான நண்பர்களிடம்கூட, தங்கள் மனைவிகளை பற்றி வெளிப்படையாக எந்த விமர்சனமும்வைக்கக்கூடாது.

தங்களை பற்றிய விளையாட்டுத்தனமான விமர்சனங்கள்கூட வெளிப்படையாக இருக்கக்கூடாது என்றே பெண்கள் கருதுகிறார்கள். ஆனாலும் சில ஆண்களுக்கு, தேவையற்ற பேச்சுகள் தங்கள் குடும்ப வாழ்க்கையையே பாதித்துவிடும் என்பதெல்லாம் தெரிவதில்லை. அதனால் அடிக்கடி அவர்கள் அப்பாவித்தனமாக நடந்து மனைவிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகிறார்கள்” என்றும் மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

‘இதுவரை நீங்கள் எப்படி நடந்திருந்தாலும் அது பற்றி கவலையில்லை. இனி நான் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளவேண்டும்’ என்று மனைவிகள் சொல்வது கணவர்களை அடிமைப்படுத்த அல்ல.. அவர்களை சிறப்புப்படுத்தத்தான் என்பதை ஆண்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். தன் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் கணவன் மிகவும் நல்லவன் என்று பெண்கள் நம்பு கிறார்கள்.

ஆனால் பெண்கள் சொல்வதை எல்லாம், எல்லா நேரங்களிலும் கேட்டு அதன்படி நடக்க முடியாது என்பது உண்மைதான். அது வாழ்க்கைக்கு அசவுகரியமாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட தருணங்களில் அந்த நேரத்தில் ‘ஆமாம்’ சொல்லி விட்டுக்கொடுத்து விட்டு, பிறகு சூழ்நிலையை பக்குவமாக எடுத்துக்கூறி புரியவைக்கலாம். ஆனால் அதற்காக பொய் சொல்லக்கூடாது.

அம்மாவிடம் பொய் சொல்லி தப்பித்திருக்கலாம். ஆனால் மனைவி யிடம் பொய் சொன்னால் தப்பிக்க முடியாது. ஒரு பெண் மனைவியாகி, தனது வாழ்க்கையை ஆண் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்ட பின்பு, தனது வாழ்க்கையை காலம் முழுக்க பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த பெண்ணுக்கு இருக்கிறது. அதற்காக அவர்கள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான், தனது கணவரை கட்டுப்பாட்டில் வைப்பது. இது உலகமயமாக்கப்பட்ட ஒரு விஷயம். இதை ஆண்கள் கவனத்தில்கொண்டுதான் ஆக வேண்டும்.
Tags:    

Similar News