செய்திகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

ஆண்டிப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்க முன்னேற்பாடு பணி தீவிரம்

Published On 2021-06-14 16:39 GMT   |   Update On 2021-06-14 16:39 GMT
ஆண்டிப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபான பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 93 மதுக்கடைகள் உள்பட ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் உள்ள 17 மதுக்கடைகளில் முன்னேற்பாடு பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது.

அதில் மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்கும் வகையில் கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனையாளர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News