செய்திகள்
கொருக்குப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல்
கொருக்குப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகர்:
கொருக்குபேட்டை கார்நிஷ் நகர் கஸ்தூரிபாய் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி முழுவதும் சென்னை குடிநீர் வாரியம் குழாய் மூலமும் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகித்து வந்தது. கடந்த 3 நாட்களாக லாரி தண்ணீர் உரிய நேரத்தில் வராததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இன்று காலை நேரு நகர் ரெயில்வே கேட் அருகில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே. நகர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.