செய்திகள்
பனமரத்துப்பட்டியில் இளம் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர் கைது
பனமரத்துப்பட்டியில் இளம் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காளியாகோவில்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி கோகிலா (வயது 33). இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டில் இருந்து பனமரத்துப்பட்டிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கோகிலாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் தாலியை பறிக்க முயன்றார். கோகிலா நகைகளை இருக்கமாக பிடித்து கொண்டதால் அந்த வாலிபர் நகைகளை பறிக்க முடியாமல், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து கோகிலா பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பனமரத்துப்பட்டியை அடுத்துள்ள திப்பம்பட்டி கிராமம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சேகர் என்பவரது மகன் கிருபாகரன் என்கிற சீனிவாசன் (24) கோகிலாவின் நகையை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபர் சீனிவாசனை கைது செய்தனர்.