குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 145 ஜோடிகளுக்கு திருமணம்
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினமும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஏராளமானோர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் 145 ஜோடிகளுக்கு கோவில் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகன் மற்றும் மணமகளின் நெருங்கிய உறவுகள் மட்டும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அப்படி இருந்தும் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.