உள்ளூர் செய்திகள்
அவிநாசியில் சமரச மைய விழிப்புணர்வு ஊர்வலம்
அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள கோர்ட்டு முன் ஊர்வலத்தை, சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அவிநாசி:
அவிநாசி சட்ட வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சமரச மைய விழிப்புணர்வு ஊர்வலம் அவிநாசியில் நடந்தது. அவிநாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள கோர்ட்டு முன் ஊர்வலத்தை, சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அப்சல் பாத்திமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, வக்கீல் சங்க தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் சுப்ரமணியம், கனகராஜ், செல்வராஜ், வக்கீல் சங்க துணை தலைவர்கள் சாமிநாதன், ஆறுமுகம், இளவரசு, பிரகாஷ் உட்பட கோர்ட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.
அவிநாசி கலைக்கல்லூரி முதல்வர் நளதம், கம்ப்யூட்டர் துறை தலைவர் மேஹமலதா மேற்பார்வையில் கல்லூரி, மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி பேராசிரியை ஹேமலதா, சார்பு நீதிபதி சுரேஷ்குமாரிடம், “அவிநாசியில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
புதிய பஸ் நிலையத்தில் ஊர்வல முடிவில், நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், தீர்க்கப்படாத வழக்குகளுக்கு, சமரச தீர்வு மையத்தை அணுகி, விரைவாக தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும். அவிநாசியில் சட்டக்கல்லூரி உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என்றார்.