உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே காரில் ஏ.சி.போட்டு தூங்கியவர் மூச்சு திணறி பலி
பொன்னேரி அருகே காரில் ஏ.சி.போட்டு தூங்கியவர் மூச்சு திணறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஹரிபிரசாத் (வயது 41). இவர் நெல் அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி காரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் காரில் ஏ.சி. போட்டு மது அருந்திவிட்டு தூங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காரில் இருந்த டீசல் தீர்ந்து விட்டதால் ஏ.சி. செயல்படாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பொன்னேரி போலீசில் தகவல் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.