செய்திகள்
அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்பிற்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை... அவரது உடல்நிலை சீராக உள்ளது - வெள்ளைமாளிகை தகவல்

Published On 2020-10-08 00:01 GMT   |   Update On 2020-10-08 00:01 GMT
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதிபர் டிரம்பிற்கு காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய  இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டப்பின் அவர் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து வந்தார். 

இதையடுத்து, 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிரம்ப் கடந்த 6-ம் தேதி வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெள்ளைமாளிகை நேற்று வெளியிட்டது. அதில் அதிபர் டிரம்பிற்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் உள்பட எந்த ஒரு கொரோனா அறிகுறியும் இல்லை. 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் டிரம்பிற்கு ஆக்சிஜன் உதவிகள் அளிக்கப்படவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாதபோது டொனால்டு டிரம்ப் தற்போதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News