தொழில்நுட்பம்
ஜியோமார்ட்

இந்தியாவில் ஜியோமார்ட் ஆன்லைன் தளம் துவக்கம்

Published On 2020-04-27 07:42 GMT   |   Update On 2020-04-27 07:42 GMT
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சார்பில் வாட்ஸ்அப் சார்ந்து இயங்கும் ஜியோ மார்ட் வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது.



ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்னதாக ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் ஆன்லைன் பிரிவாக ஜியோமார்ட் சேவை முதற்கட்டமாக மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது.  

புதிய தளத்தின் மூலம் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை கைப்பற்றும் மும்கேஷ் அம்பானியின் திட்டத்தை செயல்படுத்தும் முதல் படியாக பார்க்கப்படுகிறது.



இந்தியாவில் ஆன்லைன் விற்பனை சந்தை 2027 ஆம்  ஆண்டு வாக்கில் 200 கோடி டாலர்கள் மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜியோமார்ட் உடன் கூட்டணி அமைப்பதன் மூலம் சிறு வியாபாரங்களுக்காக முதன்மை தகவல் பரிமாற்ற தளமாக வாட்ஸ்அப் செயலி மாறும் என ஃபேஸ்புக் நம்புகிறது.

ஜியோமார்ட் சேவை நாட்டில் பொருட்களை விநியோகம் செய்ய மிகவும் கடினமான சூழ்நிலை இருக்கும் போது துவங்கப்பட்டுள்ளது. எனினும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் நிறுவனம் சோதனையை விரிவுப்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் ஜியோமார்ட் சேவையை விரிவுப்படுத்துவதில், வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. 

புதிய சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட் வாட்ஸ்அப் நம்பரை தங்களது மொபைல் போன்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பின் பொருட்களை வாங்குவதற்கான இணைய முகவரி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ்அப் மூலம் மளிகை பொருட்கள் முன்பதிவு செய்யப்பட்டதும், வாடிக்கையாளருக்கு கடையின் விவரங்கள் அனுப்பப்படும்.
Tags:    

Similar News